தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் முன்னேற்றமுயற்சிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் முதல் கட்டம் ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கதில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கி வைத்தார்.
கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இரு கட்டங்களாக செயல்படுத்தப் படவுள்ள இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.
அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றில் பயிலும் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.
இதன் மூலம் அரசு கல்லூரி மாணவர்களின் கல்வி தரம் மற்றும் தொழில்நுட்ப அணுகல் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைக்கு வர உள்ளதாகவும், மொத்தமாக 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே காணப்படும்டிஜிட்டல் வசதிகளில் உள்ள இடைவெளியை குறைப்பதே இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அரசு கல்லூரி மாணவர்கள் பின்தங்காமல் இருக்க இந்த முயற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் தொழில்நுட்ப உலகில் சமமாக முன்னேற வேண்டும் என்பதே இந்த விலையில்லா லேப்டாப் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை எளிதாக அணுக இந்த லேப்டாப்கள் உதவியாக இருக்கும். அரசு வழங்கும் விலையில்லா லேப்டாப்கள் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவக்கூடியதாக இருக்கும்.
தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் டெவலப்மென்ட், டேட்டா என்ட்ரி, டிஜிட்டல் மார்கெட்டிங், கிராபிக் டிசைன், கோடிங், வெப் டிசைன், செயற்கை நுண்ணறிவு, ப்ரீலான்சிங் போன்ற பல துறைகளில் மாணவர்கள் திறன் பெற முடியும். இதன் மூலம் அவர்கள் சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
____________________________
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், கடந்த 2003 ஏப்ரல் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஜனவரி 1-ஆம் தேதி, தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தையே தமிழக அரசு செயல்படுத்தியது.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து தமிழகத்திற்கு பொறுத்தமானதை பரிந்துரைக்க மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவை, தமிழக அரசு அமைத்தது.
இக்குழு, கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தன் பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது.
அதனை கவனமாக ஆய்வு செய்த தமிழக அரசு, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இத்திட்டம், 2026 ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கும், கடைசியாக பெற்ற மாதச் சம்பளத்தில், 50 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இதற்காக, அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில், 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதற்கான கூடுதல் நிதியை தமிழக அரசு ஏற்கும்.
ஓய்வூதியதாரர் இறந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்திலிருந்து, 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்தாலோ, 25 லட்ச ரூபாய் பணிக்கொடை வழங்கப்படும்.
இந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன், ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஜனவரி 1 முதல், தமிழக அரசு பணியில் சேரும் அனைத்து தகுதியுள்ள ஊழியர்களுக்கும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கட்டாயமாகும்.
ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு பின் ஓய்வுபெறும் அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களும், இத்திட்டத்தின் கீழ் வருவர்.
ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் பணியில் இருந்து அனைத்து அரசு ஊழியர்கள், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அல்லது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யலாம்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விரிவாக விதிகள், தகுதி நிபந்தனைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், செயல்படுத்தல் நடைமுறைகள் தனித்தனியாக அறிவிக்கப்படும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/studentlaptop-2026-01-29-11-12-10.jpg)